தஞ்சாவூர்: குருவை நெல் அறுவடை பணிகள் தொடங்கி விட்டதால் கொள்முதல் நிலையங்களை விரைவாக திறக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட விவசாயிகள் வலியுறுத்திருக்கிறார்கள். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வேளாண் குறைதீர் கூட்டத்தில் நெற்கதிர்களை எடுத்து வந்து கலந்து கொண்டவர்கள் ஆழ்குழாய் பாசனம் மூலம் முன்பட்ட குருவை சாகுபடி செய்த பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனர். எனவே, தேவைபடும் இடங்களில் கொள்முதல் நிலையங்களை திறப்பதுடன் ஈரப்பதத்தை 17 சதவிகிதத்தில் இருந்து 21 சதவிகிதமாக உயர்த்துமாறு விவசாயிகள் கேட்டு கொண்டனர். நடப்பு குருவை சாகுபடி பயிர் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை வரும் 31ம் தேதிக்குள் செலுத்தவேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு மட்டும் வெளியிட்டுள்ளதாக கூறிய விவசாயிகள், ஆனால் எந்தந்த காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீடு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை என தெரிவித்தனர். எனவே, உடனடியாக காப்பீட்டு நிறுவனங்களை அறிவிக்குமாறும் காலக்கெடுவை அதிகரிக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். …