கூடுவாஞ்சேரி: கொளப்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகில் தண்ணீர் தேங்குவதால் அங்குள்ள சாலை குண்டும், குழியுமாக மாறுகிறது. இதனை கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறையால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி பழைய மாமல்லபுரம் சாலையில் முடிவடையும் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை 18 கிலோமீட்டர் கொண்டது. இந்த சாலையின் இருபுறத்திலும் சரிவர கால்வாய் அமைத்தால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே கழிவுநீர் மற்றும் மழை நீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. இந்நிலையில், கொளப்பாக்கம் அடுத்த ஆலப்பாக்கம் பெட்ரோல் பங்க் ஒட்டியபடி உள்ள கால்வாயில் கழிவுநீர் வெளியேறி அங்கே குளம் போல் காட்சி அளிக்கிறது.இதனால், அப்பகுதியில் சாலை உடைப்பு ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சி அளித்து வருகிறது. இதில், சாலையின் இருபுறத்திலும் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் குடும்பத்துடன் பைக்குகளில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் அதன் விழுந்து எழுந்து படுகாயத்துடன் செல்கின்றனர்.மேலும் அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்களால் சாலையோரத்தில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் வேலைக்கு செல்வோர் மீது கழிவு நீர் பீச்சி அடிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கொளப்பாக்கம் அடுத்த நல்லம்பாக்கம் கூட்ரோட்டு பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த வழியாக செல்லும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளுவதில்லை.மேலும், பெட்ரோல் பங்க் அருகில் சாலையில் தண்ணீர் தேங்கியபடி குண்டும், குழியுமாக இருப்பதை பார்த்துவிட்டு கண்டும் காணாமல் செல்கின்றனர். அப்பகுதியில் எந்த நேரத்திலும் விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்….