சென்னை: கொளத்தூரில் நடந்த அதிமுக உள்கட்சி தேர்தலில் அடிதடி ஏற்பட்டதுடன், ஒரு தரப்பை வெளியே அனுப்பி, கதவை அடைத்து தேர்தல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட அதிமுக உள்கட்சி தேர்தல், கொளத்தூர் எஸ்.ஆர்.பி.காலனி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயபால் மற்றும் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து ஆகியோர் தலைமையில் தேர்தல் நடந்தது. இதில், தற்போது மாவட்ட செயலாளராக உள்ள வெங்கடேஷ் பாபு மீண்டும் அதே பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. அப்போது, 30 பேருடன் அங்கு வந்த வில்லிவாக்கத்தை சேர்ந்த எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் மங்காராமன், பகுதி செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கொளத்தூர் கணேசனுக்கு ஆதரவாக மனு தாக்கல் செய்ய முயன்றார்.இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் பாபு தரப்பினர், ‘‘நீங்கள் பரிந்துரைக்கும் நபர் மீது ஏற்கனவே ஊழல் புகார் சுமத்தப்பட்டு பகுதி செயலாளர் பதவியிலிருந்து, கட்சி மேலிடம் நீக்கிவிட்டது. அவரை எப்படி மாவட்ட செயலாளராக பரிந்துரை செய்வீர்கள், என கேட்டனர். இதனால், இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அது கைகலப்பாக மாறியது. அப்போது, வெங்கடேஷ்பாபு தரப்பினர், வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மற்றொரு தரப்பினரை அடித்து உதைத்து, மண்டபத்தில் இருந்து வெளியேற்றினர். பின்னர், மண்டப கதவை மூடி தாழிட்டு, தேர்தலை நடத்தினர். நீண்ட நேரமாக மண்டபத்திற்கு வெளியே காத்திருந்த மற்றொரு தரப்பினர், போலீசாரின் அறிவுறுத்தலை ஏற்று அங்கிருந்து கலைந்து சென்றனர்….