சேந்தமங்கலம், பிப்.12: சேலத்தில் நேற்று திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவர் கனிமொழி எம்பியிடம், கொல்லிமலையில் உள்ள தமிழ்நாடு பழங்குடியினர் மக்கள் நல முன்னேற்ற சங்கத்தின் கவுரவ தலைவர் தங்கராஜ் அமைப்பு நிர்வாகிகள் நேரில் சந்தித்து கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கொல்லிமலை தலைமையிடமாக கொண்டு, 36 பழங்குடியின மக்களை ஒருங்கிணைத்து, தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. கொல்லிமலையில் உற்பத்தி செய்யப்படும் உலகத்தரம் வாய்ந்த மிளகிற்கு, போதிய விலை கிடைக்கவில்லை.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மிளகுக்கு வரியை உயர்த்தி, உள்நாட்டில் உற்பத்தியாகும் மிளகுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்லிமலையில் மிளகு ஒழுங்குமுறை விற்பனை கூட அமைக்க வேண்டும். வட உரிமை சட்டம் 2006 அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் பழங்குடியின மக்களின் நிலங்களை, பழங்குடியினர் அல்லாதோர் விற்பதையும் மற்ற மாநிலங்களை போல தடை செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும். மலைப்பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்களில் பயிர் செய்ய, மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 19 கோரிக்கை அடங்கிய மனுவை அவரிடம் வழங்கினர்.