செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் நடக்கும் கொலை, கொள்ளை உள்பட குற்ற சம்பவங்களை தடுக்க இரவு நேரங்களில் தீவிர வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபடுகின்றனர் என எஸ்பி அரவிந்தன் தெரிவித்தார். இதுகுறித்து அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொலை, கொள்ளை, சங்கிலி பறிப்பு, இரு சக்கர வாகன திருட்டு உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்களை தடுக்கும் நோக்கில், சுழற்சி முறையில் வாகனத் தணிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படும். சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் வந்து தங்கி, தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதால், தினமும் இரவு நேரங்களில் வரும் வாகனங்களை சோதனை செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குள் 2 முக்கிய வழித்தடங்கள் தேர்வு செய்து, தீவிர வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். அப்போது, சந்தேகப்படும்படியாக வருபவர்களை விசாரித்து, வாகனங்கள் மற்றும் ஆவணங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகிறது. இதன்மூலம் வாகன திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துவது உள்பட குற்றச் சம்பவங்களை தடுத்து, இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுகின்றனர் என்றார்….