பதான்: கொரோனா விதிமுறை மீறி மதகுரு இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா 2வது அலை தீவிரமாக இருப்பதால் இறுதி ஊர்வலத்தில் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்கக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த தடை மீறப்படுவதால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பதான் பகுதியில் தலைமை காஜி அப்துல் ஹமித் முகமது சலிமுல் காத்ரி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். இந்த தகவல் அறிந்த பலர் மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஊரடங்கை மீறி பதான் பகுதியில் குவிந்தனர். இறுதி ஊர்வலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிறிய இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. பலரும் மாஸ்க் அணியாமல் இருந்தனர்.இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘இது திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி அல்ல. மக்கள் அனைவரும் அவர்களாகவே வந்து கூடினர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு ஒலிபெருக்கில் தொடர்ந்து வலியுறுத்தினோம். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்….