சென்னை: கொரோனா தடுப்பு பணியில் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என அமைச்சர் நாசர் எச்சரித்துள்ளார். திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், திருத்தணி மற்றும் திருவள்ளூர் சட்டசபை தொகுதிகளுக்கான கொரோனா தடுப்பு பணி ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமை வகித்தார். திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா வரவேற்றார். இதில், அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ.,க்கள் திருத்தணி எஸ்.சந்திரன், திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் நாசர் பேசியதாவது: கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற முதல்வர் ஸ்டாலின் தேவையான மருத்துவ உபகரணங்களை பிற மாநிலங்களில் இருந்து வாங்கி வருகிறார். மருத்துவர்கள் மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என மக்களிடம் எடுத்துக்கூறி, அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடித்தால், அதற்கேற்றவாறு காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் கூடுதல் வாகனங்கள் மூலம் கிராமம் மற்றும் நகர்புறங்களில் விற்பனை செய்ய வேண்டும். கொரோனா தொற்று பரவல் தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவு, பகலாக உழைக்கிறார். ஆனால், சில அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் மெத்தனமாக செயல்படுகின்றனர். இது ஆட்சிக்கு கெட்ட பெயர் உருவாக்கி தரும் நிலையில் உள்ளது. ஆகையால் இனிவரும் காலங்களில் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். அடுத்த ஆய்வு கூட்டத்தில் சரியான முறையில் வேலை செய்யாத அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தண்டிக்கப்படுவார்கள். நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். தவறும் பட்சத்தில் நாங்கள் உங்களை மாற்ற வேண்டியதிருக்கும். இவ்வாறு அவர் பேசினார்….
கொரோனா தடுப்பு பணியில் அதிகாரிகள் மெத்தனம் காட்டக்கூடாது: அமைச்சர் ஆவடி நாசர் எச்சரிக்கை
previous post