Tuesday, May 21, 2024
Home » கொரோனா கொல்லுயிரியால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும்!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!!

கொரோனா கொல்லுயிரியால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும்!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!!

by kannappan

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்ச ரூபாய் நிவாரண தொகையாக வைப்பீடு செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் நலனை பாதுகாப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறிந்து உதவ மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் சிறப்பு பணிப்பிரிவு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யவும், குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் போது வட்டியோடு அந்த தொகையை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தாய் அல்லது தந்தையை இழந்து தற்போது கொரோனா தொற்றால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் 5 லட்ச ரூபாய் அவர்கள் பெயரில் வைப்பீடு செய்யப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்கும் இடம் வழங்கப்படும் என்றும் இக்குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்வி மற்றும் விடுதி செலவுகளை முழுமையாக அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். 
கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுடன் இருக்கும் தாய் அல்லது தந்தைக்கு உடனடி நிவாரணமாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அரசு விடுதிகளில் இல்லாமல் பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவுகளுக்காக 18 வயதை எட்டும் வரை மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, அவர்களின் கல்வி மற்றும் வளர்ச்சி சிறப்பு குழுவால் மாவட்டந்தோறும் கண்காணிக்கப்படும். 
குழந்தைகளுக்கும் கொரோனாவால் கணவன் அல்லது மனைவியை இழந்து குழந்தையுடன் உள்ள பெற்றோருக்கும் அனைத்து அரசு நலத்திட்டங்களிலும் முன்னுரிமை வழங்கப்படும். நிவாரண உதவிகள் வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிட கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

You may also like

Leave a Comment

4 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi