மதுரை, செப். 22: மதுரை கொட்டாம்பட்டி வட்டாரத்தில் மேலவளவு கிராமத்தில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம் இயங்கி வருகிறது. இந்த உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம் 14 பெண் விவசாயிகள் மற்றும் 1 ஆண் விவசாயி என மொத்தம் 15 விவசாயிகள் கொண்ட உழவர் ஆர்வலர் குழுவினரால் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று உற்பத்தி மையத்தை உலக வங்கி அதிகாரி கிம்மத் படேல் ஆய்வு செய்தார். அத்துடன் கவிட்டயம்பட்டி கிராமத்தில் விவசாயி அய்யாவு வயலில் தென்னங்கன்றில் சொட்டு நீர் பாசனம் அமைத்ததையும் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது விவசாய தொழில்நுட்ப ஆலோசகரான ஷாஜகான், சென்னை தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் வித்தியாசாகர், மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) சுப்புராஜ், நீர் மேலாண்மை பயிற்சி நிலைய துணை இயக்குநர் லட்சுமி பிரபா, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுபா சாந்தி, வேளாண்மை அலுவலர் விக்னேஷ் குமார். தோட்டக்கலை துணை இயக்குநர் ரேவதி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழக பேராசிரியர் ரேவதி, பொதுப்பணி துறை, உப்பாறு உபவடிநில கோட்ட செயற்பொறியாளர் சிவபிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.