கொடைக்கானல், செப். 29: கொடைக்கானல் மேல்மலை கவுஞ்சி கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மாடுகள் மேய்ச்சல் நிலம் அமைந்துள்ளது. இதில் சுற்றுலாத்துறை சார்பாக 10 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு சாகச சுற்றுலா அமைக்கும் பணிகள் சமீபத்தில் துவங்கி நடந்து வருகின்றன. ஏற்கனவே இப்பகுதியில் மீன் பண்ணை, சமத்துவபுரம், கூட்டுறவு கல்லூரி அமைக்க அரசு முயற்சி செய்தது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்து இப்பகுதியில் எந்த திட்டங்களும் செயல்படுத்த கூடாது என உத்தரவு பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தற்போது சாகச சுற்றுலா மையம் என்ற பெயரில் மாடுகள் மேய்ச்சல் நிலத்தை சுருக்குவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து நேற்று பணி செய்யும் இடத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்ததும் கொடைக்கானல் ஆர்டிஓ ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் உள்ளிட்டோர் வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் கிராம மக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.