சென்னை: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பில் இருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை சாதிக்பாஷா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான சென்னை உட்பட மாநிலம் முழுவதும் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் பகுதியை சேர்ந்தவர் அக்கம்மா (எ) சாதிக்பாஷா (38). இவர், தனது கூட்டாளிகளுடன் இணைந்து தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ரகசியமாக இந்த கும்பலை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 21ம் தேதி மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே சாதிக்பாஷா, அவரது கூட்டாளிகளான இலந்தன்குடியை சேர்ந்த ஜஹபர் அலி(58), கோவையை சேர்ந்த முகமது ஆஷிக்(29), காரைக்கால் பகுதியை சேர்ந்த முகமது இர்பான்(22), சென்னை அயனாவரத்தை சேர்ந்த ரஹ்மத் (29) ஆகிய 5 பேரை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், துப்பாக்கிகள் மற்றும் தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களின் வரைப்படங்கள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட சாதிக்பாஷா உட்பட 5 பேரிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு, அந்த5 பேரையும் போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.இதற்கிடையே சாதிக்பாஷா மற்றும் அவரது கூட்டாளிகளின் தொடர்புகள் குறித்த அறிக்கையை ஒன்றிய உளவுத்துறை அமைச்சகத்துக்கு தமிழக போலீசார் அனுப்பினர். அந்த அறிக்கையின் படி இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) விசாரணை நடத்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மயிலாடுதுறை சாதிக்பாஷா மற்றும் அவரது கூட்டாளிகளின் தொடர்புகள் குறித்து ரகசிய விசாரணையை தொடங்கினர். அதில், சாதிக்பாஷா 2018ல் சென்னை மண்ணடியில் மன்னார் இப்ராஹிம் தெருவில் மதப்பிரச்சார மையம் மற்றும் தற்காப்பு கலை பயிற்சி மையம் நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், தனது மதப்பிரசார மையத்துக்கு வரும் வாலிபர்களை மூளை சலவை செய்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்த்து அவர்களுக்கு தீவிரவாதம் தொடர்பான தற்காப்பு பயிற்சி அளித்ததும், அந்த அமைப்புக்கு தங்களது கூட்டாளிகள் மற்றும் மூளை சலவை செய்த வாலிபர்கள் மூலம் நிதி திரட்டி ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பியுள்ளதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து சாதிக்பாஷாவை சென்னை மாநகர வடக்கு கடற்கரை காவல் நிலையம் போலீசார் கைது செய்தனர். பிறகு சாதிக்பாஷா ஜாமீனில் வெளியே வந்து தனது கூட்டாளிகளுடன் இணைந்து தமிழகத்தில் மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டி அதை நடத்த பல வகையில் முயற்சி செய்ததும் தேசிய புலனாய்பு முகமை விசாரணையில் உறுதியானது. அதைதொடார்ந்து சிறையில் உள்ள மயிலாடுதுறை சாதிக்பாஷா மற்றும் அவரது கூட்டாளிகளான ஜஹபர் அலி, ரஹ்மத், முகமது இர்பான், முகமது ஆஷிக் ஆகியோருக்கு தொடர்பான 9 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய போலீசார் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர்.குறிப்பாக, தேசிய புலனாய்வு முகமை எஸ்பி ஸ்ரீஜித் தலைமையிலான 14 அதிகாரிகள் சாதிக்பாஷா தொடர்புடைய இடங்களான மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர், இலந்தங்குடி, அரிவேளூர், கிளியனூர், உத்திரங்குடி ஆகிய 5 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நீடூரில் சாதிக் பாஷாவுக்கு தொடர்புடைய ஒரு வீடு, குத்தாலம் அருகே அரிவேளூரில் ஜஹபர் அலி வீடு, கிளியனூரில் உள்ள சாதிக் பாஷா தொடர்புடைய அப்துல் வாஹிது வீடு மற்றும் உத்திரங்குடி, எலந்தலூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் சோதனை நடத்தினர்.அதேபோல் திருச்சி முகமது இர்பானின் மாமனார் வசித்து வரும் காரைக்கால் சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள வீட்டில் 6 பேர் கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் சோதனை நடத்தி சில ஆவணங்கள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை சென்னையில் மண்ணடி இப்ராகிம் ஷா தெரு, அங்கப்ப நாயக்கன் தெரு, குரோம்பேட்டை, அண்ணா நகர் ஆகிய இடங்களில் உள்ள வீடு, மதப்பிரசாரத்திற்கு பயன்படுத்திய இடம் மற்றும் குடோன்களிலும் சோதனை நடந்தது.9 இடங்களில் நேற்று இரவு வரை நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள், 16 எலக்ட்ரானிக் டிவைஸ், கணினியை பறிமுதல் செய்தனர். மேலும், வங்கி பண பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது. இதுதவிர சாதிக்பாஷா தனது கூட்டாளிகளுடன் தமிழகத்தில் சதித்திட்டம் தீட்டியதற்கான வரைபடங்கள் மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் குறித்து தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட வரைபடங்கள், ஆவணங்கள் மற்றும் கணினிகளை ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே அனைத்து விபரங்களும் முழுமையாக தெரியும் என்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனை நடந்த 9 இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.* சிம்கார்டுகள் பறிமுதல்காரைக்காலில் உள்ள முகமது இர்பானின் மாமனார் முகமது யாஹிப் வீட்டில், என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிகாலை அதிரடி சோதனை நடத்தினர். வீட்டில் செல்போன், சிம்கார்டு, ஆதார்காடு, வங்கி புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. …