கே.வி.குப்பம், மார்ச் 24: கே.வி.குப்பம் அருகே உரிய ஆவணங்களின்றி கோழிப்பண்ணைக்கு கொண்டு சென்ற ₹1.27 லட்சத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை காட்பாடி- குடியாத்தம் சாலை கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூரில், ஆர்.எஸ்.சாலை சந்திப்பில் வாகனதணிக்கை நடத்தினர்.
அப்போது, கோழிப்பண்ணைக்கு சென்ற லோடு வேனை நிறுத்தி நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனையிட்டனர். அதில் ₹1 லட்சத்து 27 ஆயிரம் இருந்தது. பணம் குறித்து விசாரித்தபோது, கோழிப்பண்ணைக்கு பணம் பட்டுவாடா செய்ய கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.