திருப்போரூர்: கேளம்பாக்கத்தில் அம்மன் கோயில் சிலையை, மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கேளம்பாக்கம் அருகே மாம்பாக்கத்தில் கங்கையம்மன் கோயில் உள்ளது. இந்த கிராம எல்லை தேவதையான கங்கையம்மன் கோயிலில், உள்ளூர் மக்களே பூசாரியாக உள்ளனர். தினமும் கோயிலை திறந்து வழிபாடு நடத்தி விட்டு செல்வார்.கள். இந்நிலையில், நேற்று மதியம் 1 மணியளவில் கோயிலை பூட்டி விட்டு சென்றனர். மீண்டும் மாலை 4 மணியளவில் கோயிலை திறக்க சென்றனர். அப்போது அங்கிருந்த கங்கையம்மன் கோயில் கற்சிலை உடைக்கப்பட்டு, கீழே வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அருகில் மது பாட்டில்கள் இருந்தன. தகவலறிந்து தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில், மது போதையில் சிலர் அங்கு உலாவுவதை பார்த்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோயில் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்களை தேடி வருகின்றனர். …