பாலக்காடு, ஜூன்9:பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் கேரள அரசு பஸ்சின் பின்புற சக்கரங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் தடுப்புச்சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு பணிமனையில் இருந்து நேற்று அரசு பஸ் ஒன்று மன்னார்க்காட்டிலிருந்து 40 பயணிகளுடன் ஆனைக்கட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. சோளையூர் வளைவுப்பகுதியில் திடீரென பஸ்சின் பின்சக்கரங்கள் முறிந்து விபத்துக்குள்ளாகியது.
பின்சக்கர அச்சுத்தண்டு முறிந்தவுடன் பஸ் பின்னால் நகர்ந்து சென்று தடுப்புச்சுவரில் மோதி நின்றதால் மிகப்பெரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்த மன்னார்க்காடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான வாகனத்தை மீட்டு போக்குவரத்தை சீர்ப்படுத்தினர். இந்த விபத்தில் பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து அகழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.