திருவனந்தபுரம்: கேரளாவை புரட்டிப்போட்ட கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ள நிலையில், நாளை முதல் மீண்டும் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிககனமழை கொட்டி தீர்த்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். கேரளாவின் மலைப்பகுதி மாவட்டங்களான கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவில் சிக்கி அதிகம் பேர் பலியாகினர். கோட்டயம் மாவட்டம் முண்டக்கயத்தில் மணிமலையார் நதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் வீடு ஒன்று முழுமையாக அடித்து செல்லப்பட்டது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் உடமைகளை அடித்து சென்றது. வயல்வெளிகள், வாழைத்தோட்டங்கள் என கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிகள், முகாம்கள் போன்றவற்றில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் 24 மணி நேரமும் செயல்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா 4 லட்சம் ரூபாய் உதவி தொகை வழங்கும் என தெரிவித்துள்ளார். இதனிடையே கேரளாவில் நாளை முதல் மீண்டும் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. …