ஸ்ரீபெரும்புதூர்: ரத்த புற்றுநோயால் பாதிக்கபட்ட சிறுவனின் மருத்துவ செலவுக்கு, மதுரமங்கலம் ஒன்றிய கவுன்சிலர் நிதியுதவி அளித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், சிங்கிலிபாடி கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன். கூலித் தொழிலாளி. இவரது மகன் ஜீவா (10). அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில், சில மாதங்களாக ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து, தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கூலி வேலை செய்யும் தனசேகருக்கு போதிய வருமானம் இல்லாததால், மகனின் மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் சிரமம் அடைந்தார். இதையறிந்த மதுரமங்கலம் ஒன்றிய கவுன்சிலர் எல்லம்மாள் குணசேகரன், ஜீவாவின் மருத்துவ செலவுக்கு, அவரது பெற்றோரிடம் ரூ.50 ஆயிரம் நிதியை வழங்கினார். அவருடன் சிங்கிலிபாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் இருந்தார்….