ஊட்டி,மார்ச்5: கேத்தி ரயில் நிலைய நடைபாதை தொடர்ந்து பயன் படுத்திட அனுமதிக்க கோரி ராஜ்குமார் நகர், பாரதி நகர் பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட ராஜ்குமார் நகர்,பாரதி நகரில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் கேத்தி ரயில் நிலைய நடைபாதையை கடந்த 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம்.
பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த நடைபாதையையே பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், கேத்தி ரயில் நிலையத்திid மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், ரயில் நிலையை எல்லையை சுற்றிலும் வேலி அமைப்பதாக தெரிகிறது.
மேலும்,இந்த நடைமேடையை பயன்படுத்தினால்,கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இதனால்,இப்பகுதி மக்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, கடந்த 60 ஆண்டுகளாக இவ்விரு கிராமங்களும் பயன்படுத்த வந்த நடைபாதையை தொடர்ந்து பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.