கிருஷ்ணகிரி, செப்.14: கிருஷ்ணகிரியில் நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக கனமழை பெய்தது. இதேபோல் போச்சம்பள்ளி, ராயக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகள், விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது. வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. நேற்று காலை வரை, மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம்(மில்லி மீட்டரில்): பெணுகொண்டாபுரம் -20.3, கேஆர்பி டேம் -19.8, கிருஷ்ணகிரி -10, பாம்பாறு டேம் -8, ராயக்கோட்டை -5, போச்சம்பள்ளி -3.3, நெடுங்கல் -3 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது. ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 200 கனஅடியாக உள்ள நிலையில், அந்த தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், தற்போது 24.27 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு, நேற்று முன்தினம் விநாடிக்கு 333 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 521 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து ஆற்றில் விநாடிக்கு 273 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 50.30 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
previous post