சிவகங்கை, பிப். 29: கூலித் தொழிலாளியை கொலை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. தேவகோட்டை அருகே தலக்காவயல் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி செல்வம்(45). கடந்த 19.04.2014அன்று செல்வத்திற்கும் அவரது மகன் அருண் என்பவருக்கும் குடும்ப பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அப்பகுதியில் கூலி வேலை செய்து கொண்டிருந்த காளிமுத்து(45) என்பவர் இருவரையும் விலக்கிவிட்டு சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த செல்வம் கூலித்தொழிலாளி காளிமுத்துவை கீழே தள்ளிவிட்டு அவரை தாக்கி கொலை செய்துள்ளார். கொலை குறித்த புகாரின் பேரில் தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பிரபாகர் ஆஜரானார். வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி சத்தியதாரா குற்றம்சாட்டப்பட்ட செல்வத்திற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.