திருவாரூர், மார்ச் 1: திருவாரூர் மாவட்ட கூட்டுறவு வங்கி கிளைகளில் நாளை சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழக சட்டசபையில் 2023,24ம் ஆண்டிற்கான கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கையின் போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசுகையில், கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாரா கடன்கள் மற்றும் இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பாணையை வெளியிட்டார்.
இதை செயல்படுத்தும் விதமாக நாளை (2ம் தேதி) மாவட்டத்தில் சிறப்பு கடன் தீர்வு திட்ட முகாம் நடைபெறுகிறது. அதன்படி, மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் ஆகிய கூட்டுறவு நிறுவனங்களின் அலுவலக வளாகத்தில் முகாம்கள் நடக்கிறது. எனவே கூட்டுறவு சங்கங்களில் நீண்ட காலமாக கடன் நிலுவையில் உள்ள கடன்தாரர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.