பெரம்பலூர், மார்ச் 1: பெரம்பலூர் மாவட்டத்தில் பண்ணை சாரா கடன்களை பெற்று கடன் தொகையை நீண்ட காலமாக திருப்பி செலுத்த இயலாத கடன்தாரர்களுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்ட முகாம் நாளை (2ம் தேதி) நடக்கிறது. இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரின் அறிவிப்பின் படி, பெரம்பலூர் மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நிலுவையில் உள்ள கடன்களுக்கு பயன் பெற கடன்தாரர்கள் இந்த திட்டத்தின் படி கணக்கிடப்பட்ட நிலுவை தொகையில் 25 சதவீத தொகையை 13ம் தேதிக்குள் செலுத்தி வங்கி மற்றும் சங்கத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.
மீதமுள்ள 75 சதவீத தொகையை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நாளில் இருந்து 6 மாத காலத்திற்குள் அதிகபட்சமாக 6 தவணைகளுக்குள் செலுத்த வேண்டும். கடன் வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஒப்பந்தம் மேற்கொள்ளுதல் நாள் முடிய அசல் 9 சதவீதம் சாதாரண வட்டி வசூலிக்கப்படும். கூடுதல் வட்டி, அபராத வட்டி, இத செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். அரசாணைப்படி இந்த திட்டம் அடுத்த மாதம் 13ம் தேதி வரை அமலில் இருக்கும். சிறப்பு கடன் தீர்வு திட்டம் தொடர்பான சிறப்பு முகாம்கள் அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் நாளை (2ம் தேதி) நடைபெறுகிறது. முகாம்களில் தகுதி வாய்ந்த கடன்தாரர்கள் தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களை அணுகி பயன்பெறலாம்.