ஈரோடு, அக். 19: ஈரோடு, சூரம்பட்டிவலசு, கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். இதில், அலுவலர்கள், கால அவகாசமின்றி விடுமுறை நாள்களிலும் புள்ளி விவரங்களை கோருவதையும், தினமும் காணொலி காட்சி மூலமாக ஆய்வுக் கூட்டம் நடத்தும் போக்கையும் கைவிட வேண்டும். செயலாட்சியராக உள்ள சங்கங்களில் கடன் வழங்கும் பணிகளில் தொய்வு ஏற்படுவதை தடுக்க வேண்டும். வாட்ஸ் ஆப் மூலமாக அலுவலக கடிதப் போக்குவரத்து, சுற்றறிக்கை அனுப்புவதை நிறுத்த வேண்டும்.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை பல் நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் கூட்டுறவு கொள்கைகளுக்கும், சங்கங்களின் நோக்கத்துக்கும் மாறாக பதிவாளர் செயல்பட்டு, கூட்டுறவு நிறுவனங்களை செயல் இழக்க செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். துணைப் பதிவாளர் பதவி உயர்வு பட்டியலை வெளியிட வேண்டும். கடந்த மே மாதமே வெளியிட வேண்டிய முதுநிலை ஆய்வாளர், இளநிலை ஆய்வாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவி உயர்வுப் பட்டியலை தாமதிக்காமல் வெளியிட வேண்டும். பால் கூட்டுறவு பணிக்கு, துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் கூட்டுறவு துறை அலுவலர்களை தாய் துறைக்கு பணி மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான கூட்டுறவுத்துறை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.