பழநி, ஜன. 5: பழநி அருகே ஆயக்குடி மலைப்பகுதியில் வரதாமநதி அணை உள்ளது. இந்த அணை 1972ம் ஆண்டு திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இந்த அணையின் நீர்ப்பாசனத்தில் 12 குளங்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையின் நீரைத்தான் ஆயக்குடி மக்கள் குடிநீருக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அணையின் மொத்த கொள்ளளவு 117 மில்லியன் கன அடி மட்டுமே. தற்போது ஆயக்குடி பகுதியின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.
எனவே, விவசாயம் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, வரதமாநதி அணையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை தற்போது ஆயக்குடி மக்களிடையே வலுத்து வருகிறது. இதுகுறித்து ஆயக்குடியைச் சேர்ந்த சுந்தரம் கூறியதாவது: வரதமாநதி அணையின் உள்ளே கூட்டாறு என்ற இடம் உள்ளது. இந்த இடத்தில் அணை கட்டினால் ஏராளமான நீரை சேமிக்கலாம். இதுதொடர்பாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் கலெக்டராக இருந்த வள்ளலார் பார்வையிட்டு சென்றார். எனவே, தற்போதைய கலெக்டரும் கூட்டாற்றை பார்வையிட்டு அணை கட்ட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு கூறினார்.