ஏர்வாடி: குவைத்தில் வீட்டு வேலைக்காக சென்ற ஏர்வாடி பெண் குறித்து தகவல் இல்லாததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ள திருவரங்கநேரியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மணி. இவரது மனைவி விமலா (40). இவர்களுக்கு தினேஷ் (21), பால்ராஜ் (19), ரஞ்சித்குமார் (17) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். தினேஷ் டிப்ளமோவும், பால்ராஜ் எலக்ட்ரிக்கல் கம்யூனிகேசனும், ரஞ்சித்குமார் 10ம் வகுப்பும் படித்து விட்டு வேலை தேடி வருகின்றனர். மணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் குடும்பத்தை காப்பாற்ற ஏர்வாடியை சேர்ந்த ஒருவர் மூலம் விமலா, கடந்த 2019 ஜூனில் குவைத்திற்கு சென்று வீட்டு வேலை செய்து வந்தார். வாரம் ஒருமுறை செல்போனில் தனது குடும்பத்தினருடன் பேசி வந்துள்ளார். இந்நிலையில் 2020 செப்டம்பர் முதல் விமலாவுக்கு உரிய சம்பளமும், உணவும் சரிவர வழங்கப்படவில்லை என்று விமலா தனது குடும்பத்தினரிடம் கூறி வருந்தினார். குவைத்தில் தான் கொடுமைப்படுத்தப்படுவது பற்றி அவர் அங்குள்ள இந்திய தூதரகத்திடம் புகார் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விமலா குவைத் சென்று 2 ஆண்டுகள் முடிவடைந்து விட்டதாலும், கொடுமைப்படுத்தப்படுவதாக கூறியதாலும் அவரை உடனடியாக ஊருக்கு வரும்படி குடும்பத்தினர் அழைத்துள்ளனர். அவரும் சரியென தெரிவித்த நிலையில் கடந்த மார்ச் முதல் அவரிடமிருந்து எந்த தகவலும், போனும் வரவில்லை. அவர் என்ன ஆனார்? அவரது கதி என்ன? என்பது தெரியாமல் குடும்பத்தினர் கலக்கமடைந்தனர். இதையடுத்து மணி தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு மாவட்ட கலெக்டர், எஸ்பி உள்பட அதிகாரிகளிடம் மனுக்கள் மூலம் முறையீடு செய்தார். வெளியுறவு அமைச்சகத்திற்கும் ஆன்லைனில் புகார் மனு அனுப்பினார். ஆனாலும் விமலாவின் நிலைமை கேள்விக்குறியாக இருந்தது. தற்போது விமலா உயிரிழந்து விட்டதாக குவைத்தில் இருந்து போன் மூலம் யாரோ தெரிவித்துள்ளனர். இதனால் விமலா குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர் எப்படி இறந்தார் என்று தெரிவிக்கப்படவில்லை. அதற்கான சான்றுகளும் வரவில்லை. எனவே விமலாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க புகார் கூறுகின்றனர். தான் கொடுமைப்படுத்தப்படுவதாக விமலா தெரிவித்து வந்த நிலையில் 3 மாதம் அவரை பற்றி எந்த தகவலும் இல்லாமல், திடீரென அவர் இறந்ததாக கூறுவது சந்தேகத்தை உறுதிபடுத்தும் விதமாக இருப்பதாக கணவர் மணி மீண்டும் அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியுள்ளார். இதுபற்றி அவரது மகன் ரஞ்சித்குமார் கூறுகையில், எனது தாய் இந்திய தூதரகத்திடம் புகார் செய்ய சென்றபோது, உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் அவருடன் சென்றவர் கூறினார். ஆனால் அதன்பின் தகவல் ஏதும் இல்லை. அவருடன் சென்றவர்கள் ஊருக்கு திரும்பி விட்டனர். இவர் மட்டும் வரவில்லை” என்றார். குவைத்துக்கு வேலை க்கு சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது….