குளச்சல், ஏப்.13: குளச்சல் அருகே வாணியக்குடி ஆயன்விளை பகுதியை சேர்ந்தவர் சதாசிவன் (41). கூலித்தொழிலாளி. அதே பகுதியில் உள்ள பொது பூங்காவுக்கு அடிக்கடி செல்வார். அந்த பூங்காவில் சமாதானபுரத்தை சேர்ந்த ஜினோ மற்றும் அவரது நண்பர் ஒருவர் மணிக்கணக்கில் இருந்து கொண்டு பேசுவார்களாம். இதனை அங்கு வந்த சதாசிவன் அடிக்கடி கண்டிப்பாராம். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று இரவு சதாசிவன் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மேட்டுக்கடை பகுதியில் சென்ற போது பைக்கில் வந்த ஜினோ மற்றும் அவரது நண்பர் சேர்ந்து சதாசிவனை தடுத்து நிறுத்தி சரமாரி தாக்கினர். இதில் காயமடைந்த சதாசிவன் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சதாசிவன் அளித்த புகாரின் பேரில் ஜினோ மற்றும் அவரது நண்பர் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.