கொள்ளேகால்: சரியான நேரத்தில் அரசு பேருந்து வராததை கண்டித்தும், கூடுதல் பஸ்கள் இயக்க கோரியும் 400க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் அரசு பேருந்தை மறித்து சாலையில் போராட்டம் நடத்தினர். சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலிருந்து ஹூண்டேகாலா கிராமம் வரை அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடங்களில் உள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்ட பிறகு குறைவான அரசு பேருந்து இயங்கி வந்தது. அந்த பேருந்தும் குறித்த நேரத்தில் வராததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.இதையடுத்து அரசு பேருந்தை சரியான நேரத்துக்கு இயக்க கோரியும், கூடுதல் பஸ் இயக்க கோரியும் பால்யா- கொள்ளேகால் சாலையில் நேற்று நூற்றுக்கணக்கான கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஒன்று கூடி அந்த வழியாக வந்த இரண்டு கேஎஸ்ஆர்டிசி பேருந்தை நிறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கொள்ளேகால் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தியும் மாணவர்கள் கலைய மறுத்தனர்.இதையடுத்து கேஎஸ்ஆர்டிசி மாவட்ட மேலாளர் சுப்பிரமணி சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நேரத்தில் பேருந்து இயக்கப்படும் என்றும் கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது….