* உயிர் தப்பிய அமைச்சர் மகன் * தொண்டர்கள் மீது போலீசார் தடியடிகடலூர்: குறிஞ்சிப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றத்தை கண்டித்து கடலூர் பாதிரிகுப்பத்தில் உள்ள அதிமுக மத்திய மாவட்ட அலுவலகம் சூறையாடப்பட்டது. மேலும் அங்கிருந்த பிரசார வாகனம், கார் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டது. தொண்டர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். அவர் தேர்தல் பணிகளை துவக்கி நடத்தி வந்த நிலையில் நேற்று திடீரென பழனிச்சாமிக்கு பதிலாக புவனகிரி பகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பழனிச்சாமி மாற்றப்பட்டதை தொடர்ந்து அவரது தலைமையில் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கடலூர் பாதிரிகுப்பத்தில் உள்ள அதிமுக மத்திய மாவட்ட அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு சரமாரியாக கற்களை வீசி அலுவலகத்தை தாக்கி சூறையாடினர். அமைச்சர் சம்பத்தின் அறை மற்றும் கட்சி அலுவலகக் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டது. மேலும் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிரசார வாகனம், அமைச்சர் சம்பத் மகன் பிரவீன் கார் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டது. இதற்கிடையே அலுவலகத்திற்குள் அமர்ந்திருந்த அமைச்சர் சம்பத் மகன் பிரவீன் மீது ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த பாய்ந்தனர். அப்போது, அதே அலுவலகத்தில் முதல் தளத்தில் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்கள் உடனடியாக பிரவீனை பாதுகாப்பாக காப்பாற்றி அழைத்துச் சென்றனர். இதையடுத்து பழனிச்சாமி தரப்பினரை அமைச்சர் சம்பத் தரப்பினர் விரட்டினர். அப்போது அமைச்சர் ஆதரவாளர்கள் பழனிச்சாமி மீதும் தாக்குதல் நடத்தினர். அவரது காரும் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி சாந்தி தலைமையிலான போலீசார் அதிமுகவினர் மீது தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை விரட்டியடித்தனர். இந்நிலையில் உயிர்தப்பிய அமைச்சர் சம்பத் மகன் பிரவீன் பின்னர் போலீஸ் பாதுகாப்போடு அழைத்துச் செல்லப்பட்டார். அதிமுகவினர் கோஷ்டி மோதலைத் தொடர்ந்து கட்சி அலுவலகம் மற்றும் பழனிச்சாமி இல்லம், அமைச்சர் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தில் அமைச்சர் தரப்பை சேர்ந்த 2 பேர் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்….