திருவனந்தபுரம் : காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது 8-வது நாள் ஒற்றுமை பயணத்தை கேரள மாநிலத்தில் தொடர்ந்து வருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றுமைப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 7ம் தேதி பயணத்தை தொடங்கிய ராகுல் மொத்தம் 3,500கி.மீ. தூரம் நடைபயணமாக செல்ல இருக்கிறார். 8-வது நாளாக கேரளாவில் தனது நடைப்பயணத்தை ராகுல் காந்தி தொடர்ந்து வருகிறார். திருவனந்தபுரம் அருகே நவைகுலம் என்ற இடத்தில் இருந்து நடைப்பயணத்தை தொடர்ந்த ராகுல் உடன் ஏராளமான இளைனர்களும், பெண்களும், காங்கிரஸ் தொண்டர்களும் இணைந்துள்ளனர். இளைனர்கள், சிறார்கள் ஆகியோருடன் பேசியவாறு ராகுல் காந்தி உற்சாகமான தனது ஒற்றுமை பயணத்தை தொடர்ந்து வருகிறார். கேரளா கடற்கரை நகரமான வர்கலாவை வந்தடைந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து சிவகிரி மடாலயத்தில் உள்ள ஸ்ரீ நாராயண குருவின் நினைவிடத்தில் சென்ற ராகுலை நிர்வாகிகள் ஆன்மீக முறைப்படி வரவேற்றனர். இதையடுத்து தனது நடைப்பயணத்தை தொடரும் ராகுல் காந்தி மதியம் சாத்தனூரில் ஓய்வு எடுக்கிறார். இன்று மாலை அங்கிருந்து புறப்பட்டு பள்ளிமுக்கு என்ற இடத்தில் 8 வது நாள் ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி நிறைவு செய்கிறார். …