காஞ்சிபுரம், அக்.27: குன்றத்தூரில் நாளை, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடக்கிறது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நாளை மாலை 3 மணியளவில் குன்றத்தூரில் உளள திருமண மண்டபம் ஒன்றில் நடக்கிறது. இதில், மாவட்ட அவைத்தலைவர் துரைசாமி தலைமை தாங்குகிறார். மாவட்ட துணை செயலாளர்கள் கருணாநிதி எம்எல்ஏ, வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, மாவட்ட பொருளாளர் விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இக்கூட்டத்தில் திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும். மேலும், வரும் நவம்பர் 5ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகைதந்து அவரது தலைமையில் நடைபெறும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டத்தில், பயிற்சி பாசறை பிஎல்ஏ-2 பங்கேற்பது குறித்தும், வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.