குத்தாலம், செப்.28: குத்தாலம் ஒன்றியம், கப்பூர் ஊராட்சி மற்றும் அனந்தநல்லூர் ஊராட்சியில் உள்ள கந்தமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் அமைந்துள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டு வகுப்பறைகளுடன் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அந்த கட்டிடங்களை மாணவர்கள் பயன்படுத்துவதற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் மஞ்சுளாசெல்வம் மற்றும் மோகன் ஆகியோர் தலைமை வகித்தனர். திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கைசங்கர், வடக்கு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் முன்னிலை வகித்தனர். பிடிஓ கஜேந்திரன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை இணை இயக்குனர் லேகாதமிழ்ச்செல்வன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரிசங்கர், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினர். அப்போது ஒன்றிய குழு உறுப்பினர்கள் சத்யாமணிவண்ணன், திவ்யாசரண்ராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மாணவ மாணவிகள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.