புழல், ஜன. 30: புழலில், சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், செங்குன்றத்திலிருந்து சென்னை செல்லும் திசையில் சாலைக்கும் சர்வீஸ் சாலைக்கும் இடையில் பிள்ளையார் கோயில் அருகில் மரண பள்ளங்கள் உள்ளது.
இதனால் இந்த இடத்தில் வாகன ஓட்டிகள் கடந்து செல்லும்போது கீழே விழுந்து விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக மின்விளக்குகள் எரியாததனால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோக்கள் நிலை தடுமாறி குண்டும் குழியுமாக உள்ள இந்த மையப் பகுதியில் கடந்து செல்லும்போது விபத்துக்கள் ஏற்படுகிறது. இது குறித்து புழல் பகுதியினர் பலமுறை சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை துறையினருக்கும், மாநகராட்சி மாதவரம் மண்டல அலுவலர்களுக்கும் புகார் தெரிவித்தும் கண்டும் காணாமல் உள்ளனர்.
இந்த வழியாக அரசு ஊழியர்கள் குறிப்பாக பொதுப்பணி துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சென்று வருகின்றனர். அவர்களும் இது குறித்து எந்த நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனவே இதே நிலை நீடித்தால் உயிர் சேதம் ஏற்படும் நிலை உருவாகும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குண்டும் குழியுமாக உள்ள சாலை மையப் பகுதியை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.