Tuesday, May 21, 2024
Home » குடிநீர் பிரச்னைகளை தீர்க்க புதிய திட்டம்

குடிநீர் பிரச்னைகளை தீர்க்க புதிய திட்டம்

by Karthik Yash

 

ராசிபுரம், ஏப்.25: வெண்ணந்தூர் ஒன்றியத்தில் குடிநீர் பிரச்னைகளை தீர்ப்பதற்கு புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என ராஜேஷ்குமார் எம்பி.,தெரிவித்தார். ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் ஒன்றிய அலுவலகத்தில், கிராம ஊராட்சிகளுக்கு மின்‌கலன் தூய்மை வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி., பங்கேற்று பேசியதாவது: திமுக அரசு அமைந்த பிறகு, வெண்ணந்தூர் ஒன்றிய பகுதியில் பல்வேறு திட்டங்கள் நடந்து வருகிறது. புதிய சாலை அமைக்க திட்டங்கள் வரையறுக்கப்பட்டு வருகிறது. அவை விரைவில் நடைமுறைக்கு வரும். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், ஊராட்சி பகுதிகளில் பொருத்தப்பட்ட எல்இடி விளக்குகள் தரமற்ற முறையில் கொள்முதல் செய்யப்பட்டதால், சில காலத்திற்கு பிறகு பழுதடைந்தன. இதனை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பயனற்ற எல்இடி விளக்குகள் அனைத்தும் மாற்றப்பட்டு, புதியதாக பொருத்திக்கொள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளார். ஊராட்சி பகுதிகளில் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் வாகனங்களை, அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து வழங்க வேண்டும்.

வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு, 40ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்திய திட்டமான, எடப்பாடி-ராசிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படுகிறது. அது போதுமானதாக இல்லை. அதனை சரிசெய்யும் வகையில், தமிழக முதல்வர் சுமார் ₹700 கோடி செலவில், புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். அதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு, வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களும் பயனடையும் வகையில், திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வெண்ணந்தூர் ஒன்றியம் வறட்சியான பகுதி. குடிநீர் தேவை என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. இந்த பகுதியில் உள்ள பல்வேறு ஆழ்துளை கிணறுகள், உப்பு தண்ணீராக தான் உள்ளது. அதனால், குடிநீருக்கு பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள்.

காவிரி ஆற்றின் கூட்டுக்குடிநீர் திட்டம், ஒவ்வொரு கிராமத்திற்கும் அத்தியாவசிய தேவையான ஒன்றாக உருவெடுத்து விட்டது. குடிநீர் திட்டத்தை இன்னும் 2 ஆண்டு காலத்திற்குள் நடைமுறைக்கு வந்து விட்டால், கிராம பகுதிகளில் இருக்கும் குடிநீர் பிரசனையை தீர்த்து விடலாம். இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும். அதே போல், போதமலைக்கு விரைவில் சாலை அமைக்கப்படும். மக்களுக்கான அடிப்படை வசதிகளை, ஒவ்வொன்றாக தரமாக நிறைவேற்றுவது தான் திமுக அரசின் நோக்கம். இவ்வாறு ராஜேஷ்குமார் எம்பி., பேசினார்.

You may also like

Leave a Comment

nineteen + eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi