வலங்கைமான்,டிச.19: குடவாசல் பேரூராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் குடவாசல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரக்குழு செயலாளர் சேகர் தலைமையில் குடவாசல் பேரூராட்சி பொதுமக்களின் நலன் கருதி அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
குடவாசல் பேரூராட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் பேரூராட்சி பகுதியில் புதிதாக உருவெடுத்துள்ள ஏஜெகே நகர், உப்பிலி நகர், பாலாஜி நகர், சண்முகம் பிள்ளைநகர், அனுசியா நகர் என குடவாசல் பேரூராட்சி பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீதிகள் புதிதாக உருவாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் உருவாக்கியுள்ளன.
வெளியூரில் இருந்து வரும் நபர்கள் எந்தவித குறியீடு இல்லாததால் சரியான முகவரியை சென்றடையாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஆகவே பேரூராட்சியில் உள்ள பழைய, புதிய தெருக்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகை அமைக்க வேண்டும். குடவாசல் அண்ணா தெற்கு வீதியில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீரணி அரங்கத்தை (கலையரங்கம்) புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.