கீழ்வேளூர், மே 12: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த பட்டமங்கலம் புழுதிக்குடி அனந்தவள்ளி அம்பிகா சமேத அபிமுக்கிஸ்வர சுவாமி கோயில் மற்றும் ஐயனார் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. கீழ்வேளூர் பகுதியில் மேற்கு பார்த்த சிவன் கோயில் என்பதால் மாதம்தோறும் பிரதோஷம் நடைபெறும். பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் திருமண தோஷம் நீங்கும், குழந்தை வரன் கிடைக்கும், நோய்கள் தீரும் என்று நம்பிக்கையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 8ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. அதைத் தொடர்ந்து 9ம் தேதி காலை கணபதி ஹோமமும், லட்சுமி ஹோமமும் நடைபெற்று தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் யாகசாலை பிரவேசம் நடைபெற்று முதல்கால யாகசாலை பூஜையும், நேற்று முன்தினம் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்று மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை மூன்றாம் கால யாசாலை பூஜை நடைபெற்றது. நேற்று காலை நான்காம்கால யாக சாலை பூஜை நடைபெற்று கடம் புறப்பாடு நடைபெற்று, கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மஹாஅபிஷேகம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை பிரதோஷ கைங்கர்யா சபா, உபயதாரர்கள், கிராமவாசிகள் செய்திருந்தனர்.