காளையார்கோவில், டிச.27: காளையார்கோவிலில் எளியவர்களுக்கு புத்தாடை வழங்கி கிறிஸ்துமஸ் புத்தாண்டு பெருவிழா கொண்டாடப்பட்டது. காளையார்கோவிலில் புனித வின்சென்ட் தே பவுல் சபையின் புனித அருளானந்தர் கிளை சபை சார்பாக கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு புத்தாடை, அரிசி, உணவு, இனிப்பு வழங்கும் விழா நடைபெற்றது. பங்குத்தந்தை சேசு, உதவி பங்குத்தந்தை ஜான் போஸ்கோ ஆகியோர் தலைமை வகித்தனர். சிவகங்கை மத்தியசபை தலைவர் சூசைராஜ் முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் ஆரோக்கியசாமி தொகுத்து வழங்கினார். கிளைத் தலைவர் லூர்துராஜ் வரவேற்றார்.
ஆன்மீக ஆலோசகர் பங்குத்தந்தை சேசு சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஏழைகளுக்கு உதவுவதால் ஏற்படும் மகிழ்ச்சியே உண்மையான கிறிஸ்து பிறப்பு விழாவின் சிறப்பு என்பதை உணர்ந்து காளையார்கோவில் புனித வின்சென்ட் தே பவுல் சபை உறுப்பினர்கள் சாதி மத வேறுபாடுகள் மறந்து மனிதம் சிறக்க 200 ஏழை எளிய மக்களுக்கு புத்தாடைகள், உணவு, அரிசி மற்றும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மத்தியசபை செயலாளர் பெர்னாட்ஷா, பொருளாளர் அமிர்தசாமி, சூசையப்பர்பட்டணம் வட்டார சபைத் தலைவர் அருள், செயலாளர் அருள்தாஸ், பொருளாளர் ஜேம்ஸ் வாழ்த்துரை வழங்கினர்.