குடியாத்தம், மார்ச் 29: குடியாத்தம் அருகே கிராமத்திற்குள் நுழைந்த 6 காட்டு யானைகளை வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். குடியாத்தம் வனப்பகுதி அருகிலுள்ள தனகொண்டபள்ளி, சைனகுண்டா, மோர்தனா, வீரிசெட்டிப்பள்ளி, பரதராமி, கொட்டமிட்டா, மோர்தானா, வி.டி.பாளையம், கதிர்குளம் உட்பட பல்வேறு கிராமங்களில் இரவு நேரத்தில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது. அந்த யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை குடியாத்தம் அடுத்த அனுப்பு கிராமத்திற்குள் 6 காட்டு யானைகள் பயங்கரமாக பிளிறும் சத்தத்துடன் வந்தன. பின்னர், அங்குள்ள விவசாய நிலத்திற்குள் நுழைய முயற்சி செய்தன. இதுகுறித்து தகவலறிந்த வன ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் விரைந்து வந்து, பட்டாசுகளை வெடித்து யானைகள் கூட்டத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.