வடமதுரை, பிப். 9: சாணார்பட்டி அருகே புகையிலைப்பட்டியில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் அவிழ்த்து விடப்பட்ட செட்டியபட்டி பகுதியை சேர்ந்த லட்சுமிபதி ராஜ் என்பவரின் காளை யாரிடமும் பிடிபடாமல் வெற்றி பெற்றது. தொடர்ந்து அந்த காளை வழி தெரியாமல் மிரண்டு ஓடியது. இதனால் உரிமையாளர் காளை எங்கு சென்றது தெரியாமல் தேடி வந்தார். இதற்கிடையே புகையிலைப்பட்டியில் இருந்து 8 கிமீ தொலைவில் வடமதுரையை அடுத்த சிங்காரக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்ட கிணற்றில் அந்த காளை தவறி விழுந்தது.
சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றின் தண்ணீரில் விழுந்து தத்தளித்த காளையின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள், இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான தீயணைப்ப வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி சுமார் 4 மணிநேரம் போராடி காளையை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.