புதுக்கோட்டை, டிச.1: ஐஓபி, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், மாவட்ட தொழில் மையம் சார்பில், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான செயற்கை ஆபரணம் தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா பயிற்சியை துவக்கி வைத்து உபகரணங்கள் மற்றும் கையேட்டை வழங்கினார்.
பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களின் நலனிற்காக எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு செயற்கை ஆபரணம் தயாரித்தல் பயிற்சிக்கான உபகரணங்கள் மற்றும் கையேடு வழங்கப்பட்டது.
இந்த பயிற்சி 30ம் தேதி முதல் வரும் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சி தங்களது வீடுகளுக்கு அருகிலேயே நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சியின்போது பயிற்சி உபகரணங்கள், சீருடை, உணவு வழங்கப்படும். இந்த பயிற்சி மத்திய அரசின் மேம்பாட்டு சான்றிதழ் பெற்ற பயிற்றுநரால் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியின் இறுதிநாளில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், வங்கிக் கடனுதவியும் வழங்கப்பட உள்ளது என்றார்.