தம்மம்பட்டி, பிப்.29: தம்மம்பட்டி ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த வாலிபர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பனந்தோப்பு பகுதியில், கடந்த 25ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் 490 காளைகளும், 259 மாடுபிடி வீரர்களும் களம் கண்டனர். போட்டியின் போது, செந்தாரப்பட்டி பகுதியை சேர்ந்த பால்ராஜ் மகன் பெரியசாமி(20), வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட காளையை பிடிப்பதற்காக களத்திற்கு வெளியே நின்றிருந்தார். அப்போது, மற்றொரு காளை மார்பில் முட்டியதில் படுகாயமடைந்தார். மருத்துவக் குழுவினர் அவரை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காளை முட்டிய வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
previous post