காளையார்கோவில், ஜூலை 24: காளையார்கோவிலில் இந்திய செஞ்சிலுவை சங்கம், மாஸ்டர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், மிதிவண்டி கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்க சேர்மன் பகிரத நாச்சியப்பன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் இராகவேந்திரன், மருத்துவ அலுவலர் பாபா, இரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காளையார்கோவில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் துணைத் தலைவர் ஆரோக்கியசாமி வரவேற்புரையாற்றினார். காளையார்கோவில் இந்திய செஞ்சிலுவை சங்க தலைவர் வட்டாட்சியர் பஞ்சவர்ணம் மாபெரும் இரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். இருபதிற்கும் மேற்பட்ட இரத்த கொடையாளிகள் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினார்கள். காளையார்கோவில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் செயலாளர் அலெக்ஸாண்டர் துரை நன்றி கூறினார்.