கரூர், மே. 11: கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில், மையப் பொறுப்பாளர் பணியானது நிரந்த பணியில்லை. இது ஒரு தற்காலிக பணியாகும். இந்த பணிக்கு மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினராகவும், அவர்களின் குழந்தைகள் அதே பள்ளியில் பயில்பவராகவும் இருக்க வேண்டும். அந்த குழந்தைகள் அப்பள்ளியில் இருந்து பிற பள்ளிக்கோ அல்லது ஆரம்ப வகுப்பில் இருந்து உயர் வகுப்பிற்கோ செல்லும் போதே பணிபுரியும் அந்த சுய உதவிக்குழு உறுப்பினருக்கு பதிலாக தகுதியுள்ள மாற்று சுய உதவிக்குழு உறுப்பினர் பதவியமர்த்தப்படுவர்.
இந்த தற்காலிக பணிக்கு ஊராட்சி மன்ற தலைவரோ அல்லது இதர உள்ளாட்சி பிரதிநிதிகள் எவரேனும் பணி நியமனத்திற்கு பணம் கோருவதாக புகார் எழும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.