வலங்கைமான், டிச. 23: வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் மக்கள் நலப் பணியாளர்களுக்கு காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில பேரவை முடிவின்படி நேற்று மதியம் மாநில தழுவிய வட்டார தலைநகர் ஆர்ப்பாட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் எதிரே வட்ட தலைவர் பிரபு தலைமையில் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு வட்ட பொருளாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜசேகரன் மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் சிறப்புரை ஆற்றினர். சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 50 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மக்கள் நல பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் பதவி உயர்வு மூலம் அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணியிடங்கள் வழங்க வேண்டும். குழு காப்பீட்டு தொகை பிடித்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சத்துணவு மக்கள் நலப் பணியாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்து நிலை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
காலமுறை ஊதியம் வழங்க கேட்டு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
previous post