திண்டிவனம், ஆக. 28: திண்டிவனத்தில் கால பைரவர் கோயிலில் இருந்த விநாயகர் சிலை திருடுபோனது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். திண்டிவனம், இருதயபுரம் அருகே கோயில் அருகே உள்ள காலபைரவர் கோயிலில் விநாயகர் சிலை வைத்து பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். இக்கோயிலை சாய் செந்தில் என்பவர் கவனித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சாய் செந்தில் வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
மீண்டும் நேற்று காலை வந்து பார்த்தபோது காலபைரவர் சிலை அருகே இருந்த விநாயகர் சிலை திருடுபோனது தெரியவந்தது. தகவல் அறிந்த ரோசணை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிலை திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இக்கோயிலில் இதற்கு முன்பும் ஒரு முறை திருட்டு சம்பவமும், மற்றொரு முறை கொள்ளை முயற்சியும் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.