*பசுமையாக காட்சியளித்த வயல்கள்
கோத்தகிரி : கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த கோடை மழையால் மலைக்காய்கறிகள் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. மாலை நேரங்களில் கடும் குளிரும் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மதியத்திற்கு மேல் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது.
இதனால் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. காலை முதலே மேகமூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவி வந்த நிலையில் 12 மணி அளவில் இருந்து சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கோடை மழை கொட்டி தீர்த்தது. இதனால் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மலை தோட்ட காய்கறிகளை பயிரிடப்பட்டுள்ள விவசாயிகள் கோடை மழை காரணமாக மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மழை காரணமாக குளிருடன் கூடிய இதமான காலநிலை நிலவி வருவதால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.