கோவை, நவ. 8: கோவை வனக்கல்லூரியில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், அதனை தடுக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த கருத்தரங்கு நேற்று நடந்தது. மாவட்ட வன அதிகாரி ஜெயராஜ் வரவேற்றார். இதில், வனத்துறையினர், மின்சாரம் மற்றும் தொழில்துறையினர் உள்பட பலர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு காலநிலை மாற்ற ஆய்வுத்துறை துணை இயக்குர் சவுமியா பங்கேற்று பேசியதாவது:
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது குறித்து, மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக 16 மாவட்டங்களில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. 17-வது மாவட்டமாக கோவையில் நடந்து வருகிறது. ஆய்வு மற்றும் தடுப்பு நடவடிக்கை பணிகளுக்காக மாவட்டம் தோறும் அரசு ரூ.10 லட்சம் வழங்கி வருகிறது.
2070-ம் ஆண்டுக்குள் ஸீரோ கார்பனாக மாற்றுவதை தமிழக அரசு லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். காலநிலை மாற்ற தடுப்பு மற்றும் ஆய்வுக்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செயல் கமிட்டி அமைக்கப்படுகிறது. இதற்கான திட்ட வரைவுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தயாரித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.