Sunday, June 16, 2024
Home » காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது; இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது; இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை

by kannappan

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை தரைப் பகுதியில் நுழைந்ததும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இருப்பினும்,  வட தமிழகத்தில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று  காரைக்காலில் இருந்து கிழக்கு-வடகிழக்கு பகுதியில் சுமார் 470 கிமீ தொலைவில் நிலை கொண்டு படிப்படியாக வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து வந்தது.  சென்னையிலிருந்து கிழக்கு-வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, தமிழகம் மற்றும் புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து இன்று காலையில் தரைப் பகுதிக்குள் நுழைந்ததும்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. வலுவிழந்தாலும்  வட தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை நீடிக்கும்.நேற்று வட தமிழக மாவட்டங்களான விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. அதேபோல் இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாளை தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இந்த நிலை வரும் 24 மற்றும் 25ம் தேதி வரை நீடிக்கும். அதனால் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு பரவலாக மழை நீடிக்கும். ஆந்திர கடலோரப் பகுதிகள், தமிழகம், புதுவை கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்திலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிமீ வேகத்திலும் வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். இதற்கிடையே, கிழக்கு கடல் பகுதியில் இருந்து மியான்மர் வழியாக வங்கக் கடலுக்குள் குளிர் அலையுடன் கூடிய காற்று வீசுவதால் அந்த காற்று கடல் வழியாக பயணித்து தமிழகத்தின் தரைப்பகுதியின் ஊடாக செல்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குளிர் காற்று வீசுகிறது. இதே நிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குளிர் காற்றின் பரவலால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பகல் இரவு நேரங்களில் கடும் குளிர் இருக்கும். …

You may also like

Leave a Comment

nine − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi