காரைக்குடி, செப். 5: காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 30ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜையுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து 31ம் தேதி காலை 8.45க்கு கணபதி ஹோமம், மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி. 1ம் தேதி மாலை 6 மணிக்கு முதற்கால யாக பூஜையும், இரவு 8.30க்கு பூர்ணாகுதி நடந்தது. 2ம் தேதி காலை 8.30க்கு இரண்டாம் கால யாகபூஜை, மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தது. 3ம் தேதி காலை 9 மணிக்கு நான்காம்கால யாக பூஜைகள், மாலை 6 மணிக்கு ஐந்தாம்கால யாக பூஜைகள் நடந்தது.
அதனை தொடர்ந்து கும்பாபிஷேக நாளாக நேற்று காலை 7.15க்கு ஆறாம் கால யாக பூஜைகள், காலை 9 மணிக்கு பூர்ணாகுதி தீபாரா£ரனைகள், காலை 9.15க்கு கடம் புறப்பாடு நடந்தது. அதனை தொடர்ந்து காலை 9.30 மணிக்குமேல் 10.15 மணிக்குள் விமான மகாகும்பாபிஷேகம், மூலஸ்தான மகாகும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனைகள், பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. விழாவில் எம்எல்ஏ மாங்குடி, நகராட்சி சேர்மன் முத்துத்துரை, துணைத்தலைவர் குணசேகரன், நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார், அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள். சங்கராபுரம் ஊராட்சி தலைவர் தேவிமாங்குடி, மகன்லால்மேத்தா வைரம் அண்டு தங்கம் நிறுவன நிர்வாக இயக்குநர் ரஞ்சன்மேத்தார், சோபாமேத்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.