காரைக்கால்,பிப்.16: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி நிறுவனம் நிறைய சமூக நலத்திட்டங்களை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஓ.என்.ஜி.சியின் மகிளா சமிதி அமைப்பின் மூலமாக திருவாரூர் ஒன்றியத்தில் கீழப்படுகை ஊ.ஒ. தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகள் அமர்வதற்கு இருக்கை வசதி மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு வீட்டுக்குத் தேவையான உதவி பொருட்கள் வழங்கப்பட்டது.
அதேபோல் கீழ்வேளூர் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அஞ்சுவட்டத்தம்மன் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் மாணவிகள் யோகா பயிற்சி செய்வதற்காக விரிப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் வழங்கப்பட்டது. இதில் ஓ.என்.ஜி.சி மகிளா சமிதியின் தலைவி சாந்தா உதய் பாஸ்வான் மற்றும் செயலாளர் ஜெயந்தி கொளஞ்சிநாதன், பொருளாளர் ராஜலட்சுமி செல்வராஜ் உள்ளிட்ட இதர உறுப்பினர்களும் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர் மேரி சுகுணாவதி, துணைத் தலைவர் செல்வரெத்தினம், வட்டார கல்வி அலுவலர் இளங்கோவன், தலைமை ஆசிரியர் பழனிவேல், கீழ்வேளூர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.