காரியாபட்டி, மார்ச் 6: காரியாபட்டியில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் டூவீலர்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே டூவீலர்களை நிறுத்த வாகன காப்பகம் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதுபோன்று இங்குள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால் காரியாபட்டியில் பகல் வேளையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.வெளியூர்களில் இருந்து டூவீலர்களில் வருபவர்கள் தங்களது டூவீலர்களை அரசு பள்ளி, அரசு அலுவலகம், பஸ் நிலையம், சாலையோரங்களில் நிறுத்தி செல்கின்றனர்.
இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சில நேரங்களில் நிறுத்தி வைக்கப்படும் டூவீலர்கள், சைக்கிள்கள் காணாமல் போவதும் உண்டு. தற்போது காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி நடந்து வருவதால், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் டூவீலர் வாகன காப்பகம் ஏற்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.