காரமடை, பிப்.19: கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் மாசிமக திருத்தேர் விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மங்கள வாத்தியங்கள், தாசர்களின் சங்கு, சேகண்டி முழங்க, வானில் கருடன் வட்டமிட கருடன் உருவப்படம் பொறித்த கொடியானது வேத விற்பன்னர்களால் கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது. அப்போது, பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா கோஷம் விண்ணை பிளந்தது.
தொடர்ந்து, நேற்றிரவு அன்ன வாகன உற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், அரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதனையடுத்து வரும் 23ம் தேதி வெள்ளியன்று திருக்கல்யாண உற்சவமும், அன்று இரவு யானை வாகன உற்சவமும் நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வு வரும் 24ம் தேதி சனிக்கிழமையன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், எம்.எம்.ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவகர், குணசேகரன், காரமடை நகர்மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ், துணை தலைவர் மல்லிகா, திமுக காரமடை நகர செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திருக்கோவில் செயல் அலுவலர் லோகநாதன் சிறப்பாக செய்திருந்தார்.